Wednesday, March 18, 2015

அம்மாக்களுக்கு சமர்ப்பணம்.


இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள் !
===================
அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான் !
===================
அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம் !
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம் !
===================
பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் !
===================
அப்பா வாசம்
வெயில் வாசம் !
அம்மா வாசம்
நிலா வாசம் !
எமது
சமையலறையெங்கும்
நிலா வாசம் !
===================
எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை !
அடிக்கடி வந்து
தொட்டுப்பார்க்கும்
அம்மாவின் கையே
போதுமானது !
===================
இவ்வளவு
வயதாகியும்
புதுச்சட்டைக்கு
மஞ்சள்வைத்து
வருபவனைக்
கேலி செய்யும்
நண்பர்களே ..........
அது,
அவன் வைத்த
மஞ்சள் அல்ல !
அவன்,
அம்மா வைத்த
மஞ்சள் !
===================
பிள்ளைகள்
ஊரிலிருந்து
கொண்டு வரும்
பயணப்பையில்
இந்த அம்மாக்கள்
எதிர்பார்ப்பது
இன்னுங்கொஞ்சம்
அழுக்குத்துணிகளை !
===================
மகனுக்கான
அப்பாவின்
கோபத்திற்கெல்லாம்
அம்மாவின்
முதுகுதான்
கிழக்கு !
===================





டைப்பாய்டு வந்து
படுத்த அம்மாவுக்கு
சமைக்க முடியவில்லையே
என்கிற கவலை !
===================
இங்கே பலரது
அகராதியில்
வீடு என்கிற
சொல்லுக்கு நேரே
அம்மா என்று
உள்ளது !
===================
புகைவண்டியில்
பிதுங்கி வழியும்
பெருங்கூட்டத்தில்
ஊர் போய்ச்சேர
ஒற்றைக்காலில்
நின்றுகொண்டு
எட்டு மணிநேரம்
ஒருவன்
பயணிக்க முடிவதன்
மூன்றெழுத்துக் காரணம்,
அம்மா !
===================
அம்மா தாயே
என்று
முதன் முதலில்
பிச்சை கேட்டவன்
உளவியல் மேதைகளுக்கெல்லாம்
ஆசான் !
===================
எந்தப் பொய்
சொல்லியும்
அம்மாக்களை
ஏமாற்றிவிடமுடியும்
சாப்பிட்டு விட்டேன்
என்கிற
அந்த ஒரு பொய்யைத்தவிர !
===================
அத்தி பூத்தாற்போல
அப்பனும்
மகனும்
பேசிச்சிரித்தால்
விழாத தூசிக்கு
கண்கள் தேய்த்துக்கொண்டே
அப்பால் நகர்கிறார்கள்
அம்மாக்கள் !
===================
வெளியூர் செல்லும்
பிள்ளைகளின்
பயணப்பைக்குள்
பிரியங்களைத்
திணித்து வைப்பவர்கள்
இந்த அம்மாக்கள் !
===================
பீஸ் கட்ட
பணமென்றால்
பிள்ளைகள்
அம்மாவைத்தான்
நாடுகின்றன ........
காரணம்,
எப்படியும்
வாங்கிக் கொடுத்துவிடுவாள் !
அல்லது
எடுத்துக் கொடுத்துவிட்டு
திட்டு வாங்கிக்கொள்வாள் !
===================
வீட்டுக்குள்
அப்பாவும்
இருந்தாலும்
அம்மா என்றுதான்
கதவு தட்டுகிறோம் !
===================
அம்மாக்களைப்
பற்றி
எழுதப்பட்ட
எல்லா
கவிதைகளிலும்
குறைந்தபட்சம்
இரண்டு சொட்டுக்கண்ணீர்
ஈரம் உலராமல் !
===================
அகில உலக
அம்மாக்களின்
தேசிய முழக்கம்
இதுதான் ..........
" எம்புள்ள
பசி தாங்காது! "


இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.


நன்றி - www.dinakaran.com

No comments:

Post a Comment